கல்யாணமாலை நிகழ்சிகளில் பங்குகொண்ட பலரும் என்னிடம் பகிர்ந்துகொண்ட மற்றும் எனது மனதை வெகுநாட்களாக உறுத்திக் கொண்டிருக்கும் விஷயம் இந்தியாவில் மாறிவரும் வேலை நேரம். உலகத்தில் உள்ள பல நாடுகளில் வேலை நேரம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவில் நிர்ணயிக்கப் பட்டதாக இருக்கும்போது அவ்வாறு இருந்த இந்தியாவில் அது வேகமாக மாறி வருவது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை எவ்வளவு பேர் அறிந்துள்ளனர் என்பது ஒரு கேள்விகுறி. உலக நாடுகளிடையே சிறப்பாக குடும்ப அமைப்பை சார்ந்து இயங்கும் பொருளாதார அமைப்பைக்கொண்ட இந்தியாவில் அந்த நிலைமை மாறி குடும்ப அமைப்புகள் சிதையும் ஒரு நிலையினை இந்த மாறிவரும் வேலை நேரம் ஏற்படுத்திவருகிறது என்பது ஒரு கசப்பான உண்மை.
வேலை நேரத்தை ஒரே சீராக வைத்துக்கொண்டு, வேலை செய்பவன் களைத்துவிடாமல் வேலை வாங்கி அவன் தனது குடும்பத்திற்கும் போதுமான அளவு நேரம் ஒதுக்க உதவி செய்யகூடிய அமைப்பு நமது நாட்டில் ஏற்கனவே உள்ளது. ஆனால் இப்போது வேலை நேரத்தில் எந்தவிதமான கட்டுப்படும் இல்லாமல் மாறிவரும் இந்த நிலைமை கூடிய விரைவில் மனித மனங்களை சிதைத்து குடும்ப உறுப்பினர்களிடையே மிகப்பெரிய அமைதி இன்மையை ஏற்படுத்தும் என்பதுதான் ஒரு வருத்தமான நிகழ்வு.
தற்போது இந்தியாவில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை அலுவகங்கள் மற்றும் அரசாங்க வங்கிகள் தவிர மீதி இடங்களில் இந்த குறிப்பிட்ட நேரம் வேலைசெய்வது என்பது அனேகமாக இல்லாமல் போய்விட்டது. இந்த மாற்றம் பி.பி.ஓ. என்று சொல்லப்படும் கால்சென்டர் வேலைகள், சாப்ட்வேர் எக்ஸ்போர்ட்ஸ் என இந்தியாவிற்கு அந்நிய சிலவானி அள்ளித்தரும் வேலைகளல்தான் ஏற்பட்டது என்பது ஒருபுறம் இருக்க அதையை சாக்காக வைத்துக்கொண்டு மற்ற அலுவகங்களும் தங்கள் வேலை நேரத்தை மாற்றிவிட்டது நிச்சயமாக ஒரு நியாயமான மாறுதல் இல்லை.
இங்கு முதன் முதலில் 1923ல் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான ‘மகளிர் இழப்பீடு சட்டத்தில்’ தொடங்கி 1970ல் வந்த ‘ஒப்பந்த தொழிலாளர் சட்டம்’ வரை பலவேறு சட்டங்கள் தொழிலாளர் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் உலகமயமாக்கல், தாரளமயமக்கல் என்ற மாறுதலுக்கு ஏற்ப இந்த சட்டங்களில் எந்தவித மாறுதலும் இதுவரை செய்யப்படவில்லை. இதையே உலகவங்கியும் தனது 2008 ஆண்டு அறிக்கையில் ‘உலகிலேயே மிகவும் சிக்கலான மற்றும் தொழிலாளர்களை மட்டுமே கட்டுபடுத்தும் சட்டங்களை இந்தியா இன்னமும் மாற்றாமல் வைத்துள்ளது’ என்று கூறியுள்ளது. இது மிகவும் வருத்தத்தை தரக்கூடிய விஷயம்.
லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் நிர்வாகியோ அல்லது மிகக்குறுகிய காலத்தில் அதிக அளவில் பணம் சம்பாதிக்க முயலும் தொழிலாளியோ இதற்கு இரையாவது நிச்சயம். இதில் ஒரு நிர்வாகத்தின் லாபம் பல தனி மனிதர்களுக்கு அழிவை ஏற்படுத்துகிறது. ஓட்டிற்காக மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்தமாக அணைத்து தரப்பினரையும் அழைத்து பேசி இந்த விளைவுகளுக்கு ஒரு முடிவு ஏற்பட அரசாங்கம் அக்கறையும் முயற்சியும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
மேலும் அதிக நேரத்தை அலவலகத்தில் கழிப்பது என்ற நிலைமை அவ்வாறு வேலை செய்பவர்களால் வாழ்க்கைதனை அனுபவிக்க முடியாமல் போகிறது. சம்பாதித்த பணத்தின் மகிழ்சிதனை அனுபவிக்காமல், கட்டிய வீட்டில் குதூகலம் இல்லாமல் வாழும் அர்த்தமில்லாத வாழ்க்கை பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் என்று மூன்று தலைமுறையினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மூளை அயர்ச்சி, இளவயது இரத்த அழுத்தம், சக்கரை நோய் ஆகிய வியாதிகளை சீக்கிரமே வரவழைக்கிறது.
நிச்சயமாக இப்போது உள்ள நிலையில் தொழிற்ச் சங்கங்களாலோ அல்லது தொழிளார்களாலோ இந்த நிலைமைதனை சரி செய்ய முடியாது. இது மேலும் விபரீத விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது பழமொழி ஆனால் prevention is better than cure என்பது நடைமுறைக்கான நல்ல வார்த்தை.
நான் அறிந்தவரை இதில் அரசாங்கம் தலையிட்டு, மனிதவள மேம்பாட்டுத்துறை இதனை முக்கிய பணியாக ஏற்று செயல்பட ஆணையிட வேண்டும். நாடு முழுவதும் எந்த வேலையாக இருந்தாலும் அது பத்துமணி நேரத்தை தாண்டாமல் இருக்க ஆவன செய்ய வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும். இதனை செய்தால் இளைய சமுதாயம் கட்டாயம் பிழைத்துக்கொள்ளும். மேலும் அது எதிர்கால சமுதாயம் நல்ல முறையில் பெற்றோரின் அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் பெற்று சிறந்து விளங்க வழிவகுக்கும். அரசாங்கம் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இந்த நல்ல காரியத்தை செய்யாமல் விட்டால் ஓட்டுமொத்த இந்திய சமுதாயத்தை சீரழித்த பழிக்கு ஆளாகும் என்பது உண்மை.